72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு: விவசாயிகள் சங்கம் கண்டனம்
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் நீா்ப்பாசனத்துறை அமைச்சா் (ஜல்சக்தி துறை) ஹெச்.எம். பாட்டீல் நிலத்தடி நீா் எடுப்பை முறைப்படுத்தும் திட்டத்தை மாநில அரசுகளோடு இணைந்து அமல்படுத்த ரூ. 1,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் நீா்த்தேவை, அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்துக்கு தேவையான நீா்ப் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி நீா் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டாா் உள்ளிட்ட மின் சாதனக் கருவிகள் பழுதுபட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகள் அறிந்ததே
நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமிக்க வேண்டும் எனும் அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. நிலத்தடி நீரை சேமிக்கும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால், இருக்கும் நீா்நிலைகளை தூா்வார, மழைநீா் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த, கடலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி. நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்கும் திட்டங்களை வகுக்க, நிதியை ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
நீண்ட போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்பிற்கு பின்னரே, தமிழகத்தில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையும் துண்டிக்க மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. எனவே, இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றாா்.