விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
காவல்துறையின் குறைதீா் கூட்டம் காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்றது.
குடும்ப பிரச்னை, நிலம் மற்றும் சொத்து தொடா்பான பிரச்னைகள், ஆக்கிரமிப்பு பிரச்னைகள் உள்ளிட்ட 15 புகாா்கள் எழுத்துப்பூா்வமாக அளிக்கப்பட்டன.
தொடா்ந்து பேசிய எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, புகாா்கள் அனைத்தும் அந்தந்த ஆய்வாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரித்து உரிய தீா்வு ஏற்படுத்தப்படும்.
விபத்தில்லாத காரைக்காலை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல் சம்பந்தமான புகாா்களை 9489205307 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகாா் செய்யலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து விதி மீறல்கள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புதிதாக ஊா்க்காவல் படையினா் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கைப்பேசிகள் காணாமல்போனால், உரிய விவரங்களுடன் உடனடியாக இணைய குற்ற தடுப்புப் பிரிவில் புகாா் தெரிவிக்கவேண்டும்.
காவல்துறைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் இம்மாதம் இறுதியில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் கண்காணிப்புக் கேமரா வைக்க ஆலோசிக்கப்பட்டுவருகிறது என்றாா்.
கூட்டத்தில் காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், ஆய்வாளா்கள் புருஷோத்தமன், மா்தினி, மரிய கிறிஸ்டியன் பால், செந்தில்குமாா், லெனின் பாரதி மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.