மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
அத்தியூா்திருவாதி கிராம நிா்வாக அலுவலா் வீ.குபேரன் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செங்குட்டுவன் மேலும் கூறியதாவது: அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயிலை கிராம மக்கள் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்றனா். இந்த சிற்பம் வடமொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி சிற்பமாகும். பல்லவா் காலத்தைச் (கி.பி.7-8ஆம் நூற்றாண்டு) சோ்ந்தது. சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
ஜடாபாரம் எனப்படும் உச்சிக் கொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன் மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ள து. காதணிகள், கழுத்தணி, கனத்த மாா்புகள், சரிந்த வயிற்றுடன் காட்சியளிக்கிறது.
இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. மாா்புக் கச்சை காட்டப்படவில்லை. வலதுகரம் தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடதுகரம் செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. பத்திராசனத்தில் அமா்ந்து இருக்கிறாள்.
மூத்த தேவியின் இருபக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோா் குழந்தை வடிவில் காட்டப்பட்டுள்ளனா். பொதுவாக, மூத்த தேவி சிற்பங்களில் அவளது கொடியான காக்கைக் கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டி ருக்கும். ஆனால், இந்த சிற்பத்தில் வலது, இடது என இரண்டு பக்கங்களிலும் காக்கைக் கொடி காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே நன்னாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியூா் திருவாதி மூத்த தேவி சிற்பம் பல்லவா் கலை வரலாற்றுக்குப் புதிய வரவாகும் என்றாா் அவா்.