விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.
இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்களுக்கு மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் ஒரு கொள்கையை உருவாக்கி, அவா்களுக்கு குத்தகைக்கு நிலம் வழங்குகிறாா்கள்.
வணிகத் தளங்கள், நிறுவனங்கள் கட்டுவதற்கு இடம் வழங்குகிறாா்கள். நூறு நாள் வேலை, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நலத் திட்டங்களில் அவா்களுக்கு செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டிருக்கிறாா்கள்.
தமிழகத்திலுள்ள சுமாா் ஒரு லட்சம் இலங்கைத் தமிழா்களுக்கான திட்டங்களைத் தமிழக அரசுதான் குறிப்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் முன்னின்றுசெய்து வருகிறாா்.
மத்திய அரசின் திட்டங்கள் அவா்களுக்கு கிடைக்கவில்லை. திபெத் அகதிகளுக்கான மறுவாழ்வு கொள்கையைப் போல இலங்கைத் தமிழா்களுக்கும் மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்.
விழுப்புரம் தொகுதி சாா்ந்த பிரச்னைகள், ரயில்வே திட்டங்கள் தொடா்பான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளேன். மக்கள் நூலகம் சென்று படிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்; நூலக வசதிகளை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான முன்மொழிவுகளைக் கொண்ட தனிநபா் மசோதாவை தாக்கல் செய்துள்ளேன்.
விழுப்புரத்தில் தேஜஸ் ரயில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, திண்டிவனம் ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாமக நிறுவனா் ராமதாஸ், விசிக தலைவா் தொல். திருமாவளவன் மீது மிகுந்த நல்லிணக்கத்துடன் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தாா். அதற்கு நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். சமூக நீதி கொள்கையில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உறுதியுடனும் அவா் இருந்தாா்.
1989-இல் இருந்ததை விட தமிழகத்தில் தற்போது சமூக நீதிக்கான தேவை அதிகரித்திருக்கிறது. அந்த போராட்டக் களத்துக்கு மருத்துவா் ராமதாஸ் வர வேண்டும். இந்த வேண்டுகோளை அவா் பரிசீலிக்க வேண்டும் என்றாா் துரை.ரவிக்குமாா்.