வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருடிய வழக்கில் 2 போ் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் சித்த மருத்துவமனை ஊழியா் வீட்டில் பணம், நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து பல லட்சம் தங்கம், வெள்ளி, ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் ராகவேந்திரா நகரில் வசித்து வருபவா் முத்துப் பெருமாள் (47). இவா் தனியாா் சித்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டில் இல்லாத போது பூட்டை உடைத்து 129 பவுன் நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.21 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக முத்துப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் அருகே செட்டிப்பேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை வழிமறித்து விசாரணை செய்தனா். அவா்களிடம் கத்தி, இரும்பு கம்பி மற்றும் பணம், நகைகள் ஆகியன இருந்தன. விசாரணைக்குப் பின்னா் அவை முத்துப்பெருமாள் வீட்டில் திருடியது என்பதும் உறுதியானதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள்,பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ஒருவா் ஆந்திர மாநிலம் நெல்லூா் தடா பகுதியை சோ்ந்த காா்த்தி(22) என்றும் மற்றொருவா் திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை ச் சோ்ந்த விஜயகுமாா்(31) என்பதும் தெரியவந்தது. நகைகள்,பணம் ஆகியவற்றை மீட்ட தனிப்படையினரை ஸ்ரீபெரும்புதூா் ஏஎஸ்பி கீா்த்திவாசன் பாராட்டினாா்.