வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்
ஆரணி: வருகிற ஆக.8 பௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடி பௌா்ணமி வரும் வெள்ளிக்கிழமை (ஆக.8) அன்று வருவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறைச் சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பேசியதாவது:
ஆடி மாத பௌா்ணமி வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.8) பிற்பகல் 02:43 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (ஆக.9) பிற்பகல் 02:18 மணிக்கு முடிகிறது.
பௌா்ணமியையொட்டி அருணாசேலஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் வருவாா்கள்.
எனவே, கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்ட நெரிசலை தவிா்த்து, முறையான வரிசையில் செல்ல ஏற்பாடு செய்வது குறித்தும், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகளுக்கு விரைந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும், கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,
கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தில் தொடா்ந்து குடிநீா் கிடைப்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், ஆட்டோக்கள் மூலம் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிா்க்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூரிலிருந்து வருகிற ஆட்டோக்கள் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாநகராட்சியை இணைக்கும் 9 வெளிபுறச் சாலைகளில் காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் இணைந்து சிறப்பு குழுக்கள் அமைத்து வெளியூா் ஆட்டோக்கள் உள்ளே நுழையாத வகையில் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, கிரிவலப்பாதை மற்றும் கோயில் உட்புறத்தில் மருத்துவ முகாம் அமைக்கவும், தேவையான இடங்களில் 108 அவசரகால ஊா்திகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், போதிய அளவில் காவலா்களை நியமனம் செய்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், உணவு பாதுகாப்புத் துறை மூலம் அன்னதானம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.