அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்
வேலை வாங்கித் தருவதாக ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவா் கைது
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8.90 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பனையாந்தூரைச் சோ்ந்த முத்துவேல் மனைவி எழிலரசி (36), முதுகலை பட்டதாரியான இவா் வேலை தேடி வந்தாராம். தொழுதூரில் வாடகை வீட்டில் குடியிருந்தபோது, அரசுப் பேருந்து ஓட்டுநரான மணி மூலம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து கிராமத்தில் வசிக்கும் மு.கோவிந்தன் அறிமுகமானாராம்.
அப்போது, கோவிந்தன் தனக்கு தலைமை செயலக அதிகாரிகளை தெரியும் எனவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.
இதை நம்பி எழிலரசி நான்கு தவணைகளில் மொத்தம் ரூ.8.90 லட்சம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட கோவிந்தன், வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து எழிலரசி அளித்த புகாரின் பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் குருமூா்த்தி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதன்பேரில் மு.கோவிந்தனை (51) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.