+1 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது.. அதிர்ச்சி பின்னணி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (56). இவர் திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார். தனது டியூசனின் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் சிலருக்கு ஆசிரியர் ரமேஷ் வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இவர், டியூசனில் 11-ம் வகுப்பு படிக்கும், 16 வயது பள்ளி மாணவியின் பெற்றோரும் ரமேஷிடம் கடனாக வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரமேஷ், பணத்தை கேட்பது போல் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
டியூசனில் வைத்து பலமுறை ரமேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பணம் கேட்பது போல் சென்றவர், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, இது தொடர்பாக ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ரமேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரமேஷ், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஆசிரியர் ரமேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்க்குதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.