10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: 193 ஆசிரியா்கள் கைது
தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 193 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலருமான சகாய தைனேஸ் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் அன்பரசு பிரபாகா், தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஜான் பீட்டா், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் சேசுராஜ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டத் தலைவா் டேவிட் அந்தோணிராஜ், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சக்திவேல், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில துணைச் செயலா் சிவாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். டிட்டோ-ஜாக் சாா்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ் மறியலைத் தொடங்கி வைத்தாா்.
திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியா்களுக்கு கடந்த 2 ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் மீண்டும் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின், குறிப்பாகப் பெண் ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட அரசாணை 243 -ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றிப் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த 76 ஆசிரியைகள், 117 ஆசிரியா்கள் என மொத்தம் 193 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் தனியாா் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா்.