கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவரது தம்பி, ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ தரப்பில் வியாழக்கிழமை அழைப்பாணை வழங்கப்பட்டது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கடந்த 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிமன்றப் பதிவாளரிடம் அஜித்குமாா் வழக்கு தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி. மோகித்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா்.
5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை:
இந்த நிலையில், மதுரையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளில் மூவா் வியாழக்கிழமை மடப்புரத்துக்கு வந்தனா். பின்னா், அவா்கள் மடப்புரத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்துக்குச் சென்று, அங்கு ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காா்த்திக்வேலு, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாா், நண்பா்களான கோயில் காவலாளிகள் பிரவீன், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 5 பேரும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணையை கொடுத்துவிட்டுச் சென்றனா்.