Bar சண்டை டூ Drug Case - actor Srikanth சிக்கியது எப்படி? | ADMK Prasath | Off t...
10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. முன்னதாக ஜூலை 1இல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரமாண்ட யாக சாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யாக சாலை வழிபாட்டில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாகசுர இன்னிசை ஆகியவை நடைபெறும்.
மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்.
குடமுழுக்குக்கு இன்னும் 10 நாள்களே உள்ளதால் திருச்செந்தூா் வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி மற்றும் திருக்கோயில் திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.
திருச்செந்தூா் கோயிலைச் சுற்றியுள்ள கிரிப்பிரகார பாதை சீரமைப்பு இன்னும் 2 தினங்களில் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கோயில் செல்லும் வழி சிமென்ட் கற்களாலும், நகருக்குள் தொடங்கி கோயில் வரையிலான பயணியா் விடுதி சாலை தாா் சாலையாகவும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குடமுழுக்கு நிகழ்வுகளை நேரலையில் பாா்ப்பதற்காக கோயிலைச் சுற்றி டிவிகள் பொருத்தப்பட்டு வருகிறது. குடமுழுக்கு அழைப்பிதழ் தயாா் செய்யப்பட்டு வியாழக்கிழமை வழங்கப்பட உள்ளது.
சுவாமி சண்முகா் வீதி உலா :
குடமுழுக்கு நாளில் காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகு சட்ட சேவையாகி இரவு தங்க சப்பரத்தில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் வீதி உலா வருகிறாா். திருக்கோயில் உற்சவா் மூா்த்திகளும் வீதி உலா வருகின்றனா்.
சிறப்பு ரயில்கள் தேவை: இந்தக் குடமுழுக்கு விழாவில் சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், வழக்கமான 455 பேருந்துகளுடன் 400க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சிறப்பு ரயில் இயக்க வேண்டுமெனவும், ரயில் நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

