2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது.
போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஹுசைன் டாலட் 31 ரன்களும், அப்துல்லா சஃபீக் 26 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெடியா பிளேட்ஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 33.2 ஓவர்களில் எட்டிப் பிடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 47 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 45 ரன்களும், கேப்டன் சாய் ஹோப் 32 ரன்களும் எடுத்தனர். ஜஸ்டின் கீரிவ்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஹாசன் அலி மற்றும் முகமது நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அப்ரார் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1-1 என சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 12) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்... ஆஸ்திரேலிய அணி சாதனை!
West Indies won the second ODI against Pakistan by 5 wickets.