வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணிக்காக தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடிய முகமது சிராஜை உண்மையில் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். அணிக்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் பின்னணியில் கடுமையான உழைப்பு இருக்கிறது.
ஓவல் டெஸ்ட்டில் முகமது சிராஜ் அவரது மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகக் கூறமாட்டேன். அவர் பல போட்டிகளில் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். இதைவிட இன்னும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற முடியும் என எங்களுக்கு தொடர்ச்சியாக அவர் நம்பிக்கையளித்தார். வெற்றி பெற முடியும் என்பதை நம்புமாறு அவர் எங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினார். விக்கெட் வீழ்த்த முடியும் என நம்பிக்கையளித்தார். வெற்றி பெறுவோமா என்பது உறுதியாக தெரியாதபோதும் முகமது சிராஜ் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டார் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார். ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!