2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!
2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் வணிகப் பொருள்கள் ஏற்றுமதி மட்டும் 525 முதல் 535 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட இது 12% அதிகமாகும். இதேபோன்று சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 465 முதல் 475 பில்லியன் டாலராக இருந்தது. இது 20% வளர்ச்சியாகும்.
2024 - 25 நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 824.9 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 778.1 பில்லியனாக இருந்தது. இது 6.01% உயர்வாகும்.
2025 நிதியாண்டில் மட்டும் சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 13.6% அதிகரித்து 387.5 பில்லியனாக உள்ளது. தொழில்நுட்பத் துறை, தொழில் துறை, நிதி பயணங்கள் தொடர்பான சேவைகளின் சிறந்து விளங்கியமையால் சேவைத் துறையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
வணிக பொருள்கள் ஏற்றுமதி 437.4 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் அல்லாத சரக்குகள் ஏற்றுமதி 374.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6% உயர்வாகும்.
சரக்கு மற்றும் சேவைகள் துறை ஏற்றுமதியில் நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியை எட்டி வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரால்ஹன் தெரிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்புப் பொருள்களின் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலான வழிகாட்டுதல்களை அரசு செய்துகொடுத்தால், உள்நாட்டுத் தயாரிப்புகள் மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.