2026 தேர்தல் : 'தயக்கம் காட்டும் கட்சிகள்; அமித் ஷா சொல்வது ஒரு வகையான பில்டப்' - திருமாவளவன்
2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டங்கள், மாநாடுகள் என பரபரப்பில் உள்ளது.
இப்போது வரை, திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளை தங்களது மெகா கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தத் தேர்தல் குறித்து, நேற்று அரியலூரில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும்..!
"இதுவரையில் திமுக கூட்டணிக்கு அதிமுக சவாலாக அமைவதற்கான எந்தச் சூழலும் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி இன்னும் வடிவமே பெறவில்லை. அவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. எதார்த்தமான நிலையே இது தான்.

அமித் ஷா இரு முறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்தக் கட்சிகள் கூட அந்தக் கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
ஆகவே, அதிமுக, பாஜகவைத் தவிர, வேறு எந்தக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்றே தெரியவில்லை. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக வெல்லும்... கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையான பில்டப். இந்த நொடி வரையில் திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது... வடிவம் பெற்றுள்ளது" என்று பேசியிருக்கிறார்.