21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது
பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் டி.சுபாஷிணி, உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிலையம் அருகே காலி மைதானத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக பையுடன் வந்த 3 இளைஞர்களை வழிமடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதிலிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சிபா பெகரா (31), ராமகண்டா மஜ்கி(32), அலேகா புன்ஜி(26) என்பதும், இவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து 3 இளைஞர்களையும் கைது செய்தனர்.