300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க விருக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்தாண்டு அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அதிரடி ஆட்டக்காரர்களுக்குப் பஞ்சமில்லாத ஹைதராபாத் அணியில் இஷான் கிஷனின் வருகை அதிக வலிமையாக காணப்படுகிறது.
கடந்தாண்டிலேயே மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் குவித்த ஹைதராபாத் அணி, பெங்களூருக்கு எதிரான போட்டியில் 287 ரன்கள் குவித்து வியக்க வைத்தது.
இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?
தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். அவர்களுடன் கிளாசன், கிஷன், அபினவ் மனோகர், நிதீஷ்குமார் ரெட்டி உள்ளிட்ட அதிரடி வீரர்களின் பட்டாளமே அந்த அணியில் நிரம்பி வழிகிறது. இதனால், ரசிகர் அனைவரும் இவர்களின் வாணவேடிக்கையைக் காண ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் ஹைதராபாத் அணி பற்றி இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கூறுகையில், “ஹைதராபாத் அணி 3-வது வரிசையில் இஷான் கிஷனை இறக்கிவிட்டால் அவர்களின் பேட்டிங் வரிசை இன்னும் வலுவாக மாறும். தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மாவைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அதிரடியாக விளாசினால் 300 ரன்கள் என்பது எளிதானதுதான்.
ஹைதராபாத் அணி தங்களுக்கு ஒரு அளவுகோலை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் அணி சுதந்திரமாக செயல்படுவதற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரை பாராட்டியே ஆக வேண்டும். கடந்த தொடரைப் போலவே இந்தத் தொடரிலும் தொடர்வார்கள் என்றுதான் தோன்றுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!