லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!
மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஷர்துல் தாகுரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அவர் விளையாடிய முன்னாள் அணிகளான சென்னை, கொல்கத்தாவும் ஆர்வம் காட்டவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் ஷர்துல் தாகுர், விக்கெட் வீழ்த்துவதும் மட்டுமின்றி சில முக்கியமான போட்டிகளில் சதம் விளாசி முன்னணி ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்துள்ளார்.
இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மோஷின் கான், மயாங் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், லக்னௌ அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவுள்ளார் ஷர்துல் தாகுர். மேலும், அவர் லக்னௌ அணியுடன் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால், மோஷின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகுர் களமிறங்கப்பட வாய்ப்புள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அவர் தில்லிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கப்பதற்காக விசாகப்பட்டினம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஆகியோர் லக்னௌ அணியில் இருந்தாலும், யாரும் இதுவரை அணியுடன் சேரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐபிஎல்லில் இதுவரை 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷர்துல் தாகுர், பேட்டிங்கில் 307 ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாகுர் 11 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடுவராகும் தமிழக வீரர்! ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் 7 புதிய நடுவர்கள்!