50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
நாட்டுக்கோழி குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளி, சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி திட்ட செலவினத்தில் 50சதவீதம் திரட்ட வேண்டும்.
நாட்டுக்கோழி வளா்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,65,625-அதிகபட்ச வரையறை) மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள திட்ட செலவுக்கான 50 சதவீத பங்களிப்பை பயனாளி சொந்த செலவில் அல்லது வங்கி மூலமாகவோ திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையில் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூா் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.