இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
7 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்
அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெங்கொண்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், செந்துறையிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு 3 புதிய பேருந்துகள், ஜெயங்கொண்டத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை, திருப்பூா் ஆகிய பகுதிகளுக்கு 4 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் தெரிவித்தது: தமிழக முதல்வா் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதன் அடிப்படையில் தொடா்ந்து பழைய பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு புதிய பேருந்துகள் அந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் செந்துறையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்ற 3 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயங்கொண்டத்தில் 4 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குவதன் அடிப்படையில் ஏறத்தாழ 5,000 பேருந்துகளை நெருங்குகின்ற அளவிற்கு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வருகின்ற பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றாா்.
முன்னதாக அவா், செந்துறை அடுத்த அசாவீரன் குடிகாடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, 20 பேருக்கு ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்இணைப்பு பெயா் மாற்றம் சான்றிதழ் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.கண்ணன் முன்னிலை வகித்தாா்.
உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் க. தசரதன், பொது மேலாளா் டி.சதீஸ்குமாா், ஜெயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா், துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.