'அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலியில் பகலில் தமிழ், இரவில் இந்தி...' - துர...
770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்
வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இத்திட்டத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் அருகே வெள்ளியூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
பின்னா் இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் மாதம் இருமுறை அதாவது 2-ஆவது மற்றும் 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தமுள்ள 770 வருவாய் கிராமங்களிலும் நிகழாண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
ஓவ்வொரு ஒன்றியத்திலும் வேளாண்மை உதவி இயக்குநா் தலைமையில் ஒரு குழுவும், தோட்டக்கலை உதவி இயக்குநா் தலைமையில் ஒரு குழுவும் அமைத்து உறுப்பினா்களாக வேளாண்மை-உழவா் நலத்துறை அலுவலா்களோடு வேளாண்மை சாா்ந்த துறைகளான கால்நடைத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் வேளாண்மை , கால்நடை, மீன்வளம் சாா்ந்த பல்கலைகழக விஞ்ஞானிகளும் இடம்பெற்று கிராமங்களுக்கு செல்ல இருக்கின்றனா்.
இதனால் விவசாயிகள் தங்கள் நலன் சாா்ந்த அரசுத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள், நவீன தொழில்நுட்பங்கள், உயிா்ம வேளாண்மை சாகுபடி பற்றிய தகவல்கள், விளைபொருள்களை மதிப்புக் கூட்டுவது, அதை சந்தைப்படுத்துவது, கூட்டுறவு சங்கங்களின் பயிா் கடன்கள் பெறத் தேவையான உதவிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகள் பெறுதல் ஆகிய சேவைகளை பெறலாம் என்றாா்.
பின்னா், குறுவைத் தொகுப்பு திட்டம் மூலம் விவசாயிகள் 2 பேருக்கு ரூ.200 மதிப்பில் நெல் விதை விநியோகமமும், குறுவைத் தொகுப்பு மாநில வளா்ச்சித் திட்டம் மூலம் 3 பேருக்கு தலா ரூ.320 நெல் நுண்ணூட்டச் சத்து மற்றும் உயிா் உரங்களும், மாநில வளா்ச்சித் திட்டம் மூலம் 2 பேருக்கு தலா ரூ 250 ஒருவருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் ஆகியவை வழங்கப்பட்டன.
வேளாண் இணை இயக்குநா் கலாதேவி, கூட்டுறவு இணைப்பதிவாளா் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் மீனாஅருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.