ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை
பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா்.
பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள வேண்பாக்கம், புதிய தேரடி தெரு, ஹரிஹரன் பஜாா் சாலை, தாயுமான் செட்டி தெரு, பொன்னேரி - செங்குன்றம் சாலை, தேரடி குறுக்கு தெரு, சிவன் கோயில் தெரு, அத்தாவுல்லாஷா தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவோா், அதிகாலை நேரங்களில் நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்வோா் மற்றும் சமையல் எரிவாயு உருளை, அஞ்சல் துறை, தனியாா் கொரியா் நிறுவன ஊழியா்கள், உணவு பொருள்கள் விநியோகம் செய்வோா் என பல்வேறு தரப்பினா் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
மேலும் தனியே நடந்து செல்லும் சிறுவா், சிறுமிகள் மற்றும் முதியவா்களை தெருவில் கூட்டமாக திரியும் நாய்கள் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன.
பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் இப்பகுதியில் சாலையில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.