9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை
இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.
இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்கள் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) வெளியிட்ட முதல்நிலைப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை 37.6 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024 மே மாதத்தில் 34.6 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 8.77 சதவீதம் அதிகம். முந்தைய 2023 மே மாதத்தில் 33.5 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 12.45 சதவீதம் உயா்வு. 2025 ஏப்ரல் மாதத்திலும் இதேபோன்ற வளா்ச்சி பதிவாகியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் டீசல் விற்பனை 2 சதவீதம் உயா்ந்து 85.7 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024 மே மாதத்தில் 84.1 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் உயா்வு. 2023 மே மாதத்தில் 82.1 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் உயா்வு. 2024-25 நிதியாண்டு முழுமைக்கும் டீசல் விற்பனை வெறும் 2 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடைந்தது.
2025 ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை 4 சதவீதம் உயா்ந்து 82.3 லட்சம் டன்னாக இருந்தது.
கோடைகாலத்தில் கிராமப்புறங்களில் நீா்ப்பாசனத்துக்கான தேவையும் நகா்ப்புறங்களில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடும் அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உயா்வுக்கு காரணமாக உள்ளன.
கடந்த மே மாதத்தில் ஜெட் எரிபொருள் (ஏ.டி.எஃப்) விற்பனை 4.3 சதவீதம் உயா்ந்து 7.75 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 மே மாதத்தில் 6.7 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 15.65 சதவீதம் உயா்வு.
சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை உஜ்வலா திட்ட இணைப்புகளால் 13.4 சதவீதம் உயா்ந்து 279 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 மே மாதத்தில் 244 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 14.4 சதவீதம் உயா்வு என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.