Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக ...
Ayyanar Thunai : சினிமாவை விஞ்சும் கதைகளம்... நிலா எடுக்கப் போகும் முடிவென்ன?!
விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் புதிய நெடுந்தொடர் அய்யனார் துணை.
தனம், அய்யனார் துணை ஆகிய இரண்டு புதிய தொடர்களின் ப்ரோமோக்கள் ஒரே நேரத்தில் வெளியானது. நாயகி பெண் ஆட்டோ ஓட்டுனராக சித்தரிக்கப்பட்டிருந்ததால் தனம் சீரியல் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. எனினும் தனம் சீரியலை தாண்டி அய்யனார் துணை சீரியல் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

கதைகளம் என்ன?
பெரிய தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த நாயகி நிலாவுக்கு ஆணாதிக்க மனநிலை கொண்ட ஒரு பணக்கார வீட்டு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நிலாவுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. வீட்டில் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
கல்யாண வேலைகளுக்கு உதவ ஒரு கார் ஓட்டுநராக நிலா வீட்டில் அறிமுகமாகிறார் நாயகன் சோழன். சோழனுக்கு நிலாவை பார்த்ததுமே பிடித்துவிடுகிறது.
சோழன் வீட்டில் மொத்தம் நான்கு ஆண் பிள்ளைகள். அவர்களின் `அய்யனார் துணை’ வீடு எப்போதும் சண்டை சச்சரவு என அக்கம்பக்கத்தினரால் விமர்சிக்கப்படுவது வழக்கம். வீட்டில் பெண்கள் இல்லை என்பதால் சோழனின் அண்ணனுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நாயகனின் சகோதரர்களின் பெயர்கள் ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகிவிட்டது.
நிலா வீட்டில் திருமணம் பிடிக்காததால் சோழனின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பணக்கார மாப்பிள்ளையும், நிலா வீட்டினரும் அவரை ஊர் முழுக்கத் தேடுகின்றனர்.

சோழன் நிலாவை கடத்திவிட்டதாக போலீஸில் சொல்கின்றனர். ஆனால் சோழன் போலீஸிடம் இருவரும் காதலிப்பதாக பொய் சொல்கிறார். அவர்கள் அனைவரிடமும் இருந்து நிலாவை காப்பாற்ற பொய்யாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நிலா அந்த சூழலில் தப்பித்தால் போதும் என காவல் நிலையத்தில் வைத்து சோழனை திருமணம் செய்து கொள்கிறார்.
சோழனுக்கு நிலா மீது காதல் இருப்பதால் இந்த திருமணம் மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் நிலா இந்த திருமணத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நிலாவை சோழன் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இந்த வீட்டில் திருமணமே நடக்காது என ஊரார் கேலி கிண்டல் செய்து வந்த நிலையில், சோழன் மணமகளுடன் வந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்கிறது.

சோழனின் அண்ணன் சேரன் மிகவும் பொறுப்பான மூத்த மகனாக, அமைதியானவராக இருக்கிறார். பெரிய வீட்டு பெண், சோழனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என சேரன் பயப்படுகிறார். அந்த பதற்றத்தை அழகாக நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் சேரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னா.
சோழனின் இரண்டு தம்பிகள் இந்த திருமணத்தால் வீட்டில் அண்ணி வந்துவிட்டார் என மகிழ்ச்சி அடைகின்றனர். குடிக்காரரான அப்பா வீட்டில் திருமணமே நடக்காது என்று சொன்ன ஊராரின் முன்பு கெத்தாக ஆட்டம் போடுகிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோசரி ரசிக்க வைக்கிறார்.
சோழன் - நிலாவுக்கு நடந்தது காதல் திருமணம் இல்லை என்பது வீட்டில் யாருக்கும் தெரியாது. நிலாவின் வீட்டில் அவரின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார். நிலாவின் அண்ணி இந்த விஷயத்தை நிலாவிடம் சொல்ல சோழனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். அண்ணி மட்டும் நிலாவுக்கு ஆதரவாக நிற்கிறார். அவரது வீட்டிலேயே தங்க வைக்கிறார். நிலா சோழனிடம் இருந்து விடைப் பெற்று கொண்டு தன் அண்ணியின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்.

நிலாவை பிரிந்து செல்ல மனமில்லாமல் சோழன் வீட்டின் வெளியே சாலையோரம் காத்திருக்கிறார். நிலாவின் அண்ணன் அங்கு வர, தன் மாமனார் மாமியாரை கடிந்து கொண்டு, நிலாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
சோழன் அங்கு காத்திருப்பதை பார்த்த நிலா மீண்டும் அவருடன் செல்கிறார். மகளிர் விடுதியில் தங்கவேண்டும் என நினைக்கும் நிலா என்ன முடிவெடுப்பார்? மீண்டும் சோழன் வீட்டிற்கு செல்வாரா? என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
சோழனாக நடிக்கும் அரவிந்த் நடிப்பில் அசத்துகிறார். ஜீப்பை ஓட்டி செல்லும் சில காட்சிகளில் நடிகர் விக்ரமை நியாபகப்படுத்துகிறார். சீரியல் இதே வேகத்தில் நகருமா அல்லது தொய்வடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
