வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
Chahal : `அவனுக்கு பயமில்ல அதுதான் அவன் பலம்' சஹாலை அதிகம் கொண்டாட வேண்டும்' - ஏன் தெரியுமா?
'பஞ்சாபின் அசாதாரண வெற்றி!'
ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த டிஃபண்டை செய்து காண்பித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். யுஸ்வேந்திர சஹாலின் ஆகச்சிறந்த பௌலிங்கினால் மட்டுமே பஞ்சாப் அணியால் இதை சாத்திக்க முடிந்தது. ஐ.பி.எல்- போட்டிகளைப் பொறுத்தவரைக்கும் சஹால் ஒரு ஜாம்பவான். ஆனால், அவர் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்குக் கொண்டாடப்படவில்லை என்பதே நிதர்சனம்.

'போட்டியின் நிலை!'
பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை கொல்கத்தா அணி சேஸ் செய்கையில் பஞ்சாப் அணியின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பல கிரிக்கெட் தளங்களுமே கூட பஞ்சாப் வெற்றி பெற 1% வாய்ப்பு மட்டுமே இருப்பதாக கணித்திருந்தனர். பவர்ப்ளே முடிகிற வரைக்குமே போட்டி கொல்கத்தாவின் கையில்தான் இருந்தது.
8 வது ஓவரில் சஹாலின் பௌலிங்கில் ரஹானே Lbw ஆகினார். அந்த Lbw க்கு ரிவியூவ் எடுத்திருந்தால் ரஹானே தப்பித்திருப்பார். ஆனால், ரஹானே அந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.

அனைவரும் கணித்திருந்த அந்த 1% வாய்ப்பு பஞ்சாபுக்கு இங்கேதான் கிடைத்தது. அந்த சின்ன துரும்பைப் பிடித்துக் கொண்டு ஒரு மலையை இழுத்து சாய்த்திருந்தார் சஹால். அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என அடுத்த 2 ஓவர்களின் இன்னும் 3 விக்கெட்டுகளை சஹால் எடுத்திருந்தார்.

கொல்கத்தாவின் மிடில் ஆர்டர் மொத்தமும் காலி. ரஸல்லின் விக்கெட்டையும் ஏறக்குறைய எடுத்துவிட்டார். பவுண்டரி லைனில் யான்சனின் கையில் சில இன்ச்களில் சிக்காமல் போன அந்த பந்து கேட்ச் ஆகியிருந்தால் ரஸலின் விக்கெட்டையும் சஹால் எடுத்திருப்பார். வெற்றியோடு 5 விக்கெட் ஹாலும் அவருக்குக் கிடைத்திருக்கும்.
'சஹாலின் டெக்னிக்!'
சஹால், ஒரு லெக் ஸ்பின்னர். நவீன லெக் ஸ்பின்னர்களின் ஸ்டைலை பார்த்திருக்கிறீர்களா? வேகமாக வந்து ஸ்டம்பை நோக்கி டைட்டாக ஒரு மிதவேகப் பந்துவீச்சாளரைப்போல வேகமாக வீசுவார்கள் அல்லது லெக் ஸ்பின்னர் எனப் பெயரை வைத்துக்கொண்டு கூக்ளியை மட்டுமே வீசிக் கொண்டிருப்பார்கள்.
லெக் ப்ரேக் வீசுவதுதான் அவர்களின் ஸ்டாக் டெலிவரி. கூக்ளிக்கள் வேரியேஷன் மட்டுமே. ஆனால், அதை அப்படியே உல்ட்டாவாக செய்து கொண்டிருப்பார்கள். சஹால் இதிலும் விதிவிலக்குதான். வேரியேஷன்களை வேரியேஷன்களாக மட்டுமே பயன்படுத்துவார். பந்தின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் காற்றில் மேஜிக் செய்வார்.
'அசட்டுத் துணிச்சல்!"
டெக்னிக்கையெல்லாம் தாண்டி அசட்டுத்தனமான துணிச்சல் ஒன்று அவரிடம் இருக்கும். அதுதான் அவரின் பெரிய பலம். ரஸல் நின்ற இடத்தில் நின்றே சிக்சர் அடிப்பார் என தெரியும். ஆனால், அதற்காகவெல்லாம் அவர் தற்காப்பாக வீசிவிட மாட்டார். வெறும் 34 ரன்கள்தான் தேவை எனும் நிலையில் ரஸல் க்ரீஸில் நின்றாரே, அப்போது சஹால் வீசிய அந்த ஓவரில் டாட்கள் வீச வேண்டும் என்றே அவர் நினைக்கவில்லை.
அம்பயருக்கு நேராக டீப்பில் ஒரு பீல்டர், லாங் ஆன், லாங் ஆப், டீப் எக்ஸ்ட்ரா கவர் என நேராக பவுண்டரி லைனில் ஒரு அணையை கட்டிவிட்டார். அப்படி பீல்டிங்கை நிறுத்திவிட்டு ரஸலுக்கு ஷாட் ஆட ஏதுவாக இடம் கொடுத்து வீசியிருப்பார். அதனால்தான் ரஸல் அந்த ஓவரில் இரண்டு சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்தார். இது சஹால் தெரிந்தே எடுத்த ரிஸ்க்.
லாங் ஆபில் யான்செனிடம் அந்த பந்து சிக்கியிருந்தால் சஹால் எடுத்த ரிஸ்க்கிற்கு பரிசு கிடைத்திருக்கும். கிரிக்கெட் பேட்டர்களின் போட்டியாகவே மாறிவிட்டது எனப் பேசுகிறோம். அப்படி மாறியதற்கு பேட்டர்கள் ரிஸ்க் எடுத்து சிக்சர்களுக்காக ஆடுவதும் மிக முக்கிய காரணம். அதே அளவுக்கான ரிஸ்க்கை பௌலர்கள் எடுப்பதில்லை. இந்தப் புள்ளியில்தான் சஹால் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறார்.

'சின்னச்சாமி மைதானத்தின் தாக்கம்!'
அவருக்கு இந்த தைரியமான குணாதிசயமும் ரிஸ்க் எடுக்கும் தீர்க்கமும் பெங்களூரு அணியிலிருந்துதான் கிடைக்கப்பெற்றது. சின்னச்சாமி மைதானம் பேட்டர்களின் சொர்க்கபுரி. அங்கே ஒரு பௌலர் சர்வைவ் ஆக வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்க வேண்டும். ரன்கள் போனாலும் பரவாயில்லை என விக்கெட்டுக்காக முயல வேண்டும். அப்படியானவர்கள் மட்டுமே அங்கே சாதிக்க முடியும். சஹால் அங்கே வீசி வீசி தனக்குள் அந்த குணாதிசயத்தை வளர்த்துக்கொண்டார்.

சின்னச்சாமி மைதானத்தில் ஒன்றிரண்டு பௌலர்கள் மட்டுமே 50+ விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். அதில் சஹாலும் ஒருவர்.
'சஹால் ஒரு அளப்பரிய சொத்து!'
இப்படிப்பட்ட ஒரு வீரரை அணிகள் அளப்பரிய சொத்தாக மதித்து நடத்த வேண்டும். ஆனால், பெங்களூரு அணி அவரை தக்கவைக்காமல் ரிலீஸ் செய்தது. இத்தனைக்கும் அந்த அணிக்காக எத்தனையோ போட்டிகளை சஹால் வென்று கொடுத்திருக்கிறார். பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாறியபோது அந்த அணியும் அவரை ஒரு கட்டத்திற்கு மேல் தக்கவைக்கவில்லை.

இப்போது பஞ்சாப் அணியில் ஆடி வருகிறார். ஸ்ரேயாஷூமே சஹாலை அவ்வளவு சிறப்பாக பயன்படுத்தியிருக்கவில்லை. சென்னைக்கு எதிரான போட்டியில் பார்மிலேயே இல்லாத சிவம் துபேவை காரணம் காட்டி அவர் அவுட் ஆகும் வரை சஹாலுக்கு ஓவரே கொடுக்காமல் இருந்தார். சஹால் மாதிரியான ஒரு வீரருக்கு இழைக்கப்பட்ட அநீதி இது.
ஐ.பி.எல் அணிகள் இன்னமும் சஹாலின் மதிப்பை முழுமையாக உணரவில்லை. பஞ்சாப் அணியாவது அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.