Corona: "கொரோனாவால் எந்த உயிரிழப்பும் தற்போது ஏற்படவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
"உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்கக் கூடாது. கொரோனாவைப் பொருத்தவரை 2019 இறுதியிலிருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, காமா பிளஸ், ஒமேக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களைப் பெற்று வந்தது.
தற்போது, வந்துள்ள கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை 19 மாதிரிகள் பூனாவில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை.

இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூன்று நாட்களிலிருந்து தொண்டை வலி, சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும்.
பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தீராத காய்ச்சல், நீண்ட நாள் தொண்டை வலி, சளி சரியாகாமலிருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்களுக்குப் பொதுவான அறிவுறுத்தலோ, விதியோ, சட்டமோ கட்டாயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்குச் செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால். அது நல்லது. இந்திய அளவில் கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்குப் பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை.
தனியார் மருத்துவமனை உட்பட எங்கு அனுமதித்தாலும் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று சொல்லும் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது கொரோனா உள்ளிட்ட 12, 13 வகையான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

அதில், ஒன்று, இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாகக் கருத முடியாது. அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை.
கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஒன்றிய சுகாதாரத் துறை விதிக்கவில்லை.