Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism
Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச் சென்றிருந்தாள் என் தோழி. அப்போது அவளுக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். பொதுவாக பெற்றோருக்கு ஒரு பாதிப்பு இருந்தால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் வருவது இயல்பு... ஆனால், குழந்தையின் ஆட்டிசம் பாதிப்பு எப்படி பெற்றோரை பாதிக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மருத்துவர் சொன்ன தகவலை உங்கள் தோழியும் நீங்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. முதலில் அதில் தெளிவு பெறுங்கள். அதாவது, ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு சில பெற்றோர்கள் தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதை உணர்வது என்பது இயல்பானதுதான்.
ஆட்டிசம் என்பது ஒருவித மரபியல் குறைபாடு. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால், பெற்றோர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ ஆட்டிசம் தொடர்பான பண்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முந்தைய தலைமுறையில் ஆட்டிசம் குறித்த விழிப்பு உணர்வு குறைவு. பலரும் தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதுவே, பின்னாளில் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியவரும். அதன் தொடர்ச்சியாக மருத்துவருடனான உரையாடலில், பரிசோதனையில், பெற்றோருக்கும் அந்த பாதிப்பு ஏற்கெனவே இருந்ததை மருத்துவர் சொல்வார்.
இன்னும் சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்ததும், அது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவார்கள். அப்போது அவர்கள் கேள்விப்படுகிற, பார்க்கிற பல அறிகுறிகள், நடத்தை பிரச்னைகள் தங்களுக்கும் ஏற்கெனவே இருந்ததை உணர்வார்கள்.

குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போல அல்லாமல் பெற்றோர்கள் மிதமான அறிகுறிகளோடு வாழ்ந்திருப்பார்கள். எனவே, பிற்காலத்தில் இது தெரியவரும்போது, 'ஆட்டிசமா... எனக்கா.... நான் நல்லாத்தானே படிச்சேன்... நல்லாத்தானே வேலை பார்த்தேன்...' என்று அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தையையும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். தேவைப்பட்டால் பெற்றோரும் உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்.
மற்றபடி இது குறித்து குற்ற உணர்வு கொள்வதோ, குழம்புவதோ தேவையில்லாதது. 'என்னைப் போல ஒருவன் அல்லது ஒருத்தி' என குழந்தையை அரவணைத்து, சிறப்பாக வளர்க்க முயற்சி செய்வதுதான் சரியான அணுகுமுறை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.