“ECR விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அதிமுகவைச் சேர்ந்தவர்" - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?
சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, " தினமும் 5 பொய்களை சொல்வதென சத்தியம் செய்து கொண்டு அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும், அதனை திமுகவுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது. 2 நாட்களுக்கு முன் ஈசிஆரில் நடந்த சம்பவத்தையும் திமுகவுடன் தொடர்புப்படுத்தி பேசி இருக்கிறார்.
திமுக கொடியுடன் சென்றால், குற்றம் செய்வதற்கு லைசென்ஸா என்று கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அந்த வீடியோவில் இருந்த கார் ஒன்று, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. அந்த காரினை பயன்படுத்தியவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்குக்கூட திமுக மீது பழி சுமத்துகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதிமுகவினர் செய்த குற்றங்களின் எண்ணிக்கை ஏராளம். திமுகவின் கொடியை கட்டிக்கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பேசியிருக்கிறார்.