கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக முதல் டெஸ்ட் - போட்டிக்குமுன் கேப்டன் கில் பேசியவை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய தசாப்தத்தின் தொடக்கமாக கேப்டன் சுப்மன் கில் தலைமையில், இங்கிலாந்து அணியை லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது இந்திய இளம் படை.
கோலி, அஸ்வின், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத இந்த அணிக்கு ஜாம்பவான் சச்சின், "இங்கிலாந்தில் விளையாடும்போது எப்போதும், வானிலை, காற்றின் தரம், மைதானத்தின் தன்மை ஆகிய 3 விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் சுப்மன் கில், "ஒரு கேப்டனாக இங்கிலாந்தில் விளையாட உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது.
உங்கள் தலைமுறை வீரர்களில் நீங்கள் சிறந்தவராக இருந்தால் இரண்டு அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்வது பெரிய விஷயம்.
எங்கள் அணி அனுபவம் வாய்ந்ததாக இல்லை என நிறைய பேர் கூறுகிறார்கள்.
ஆனால், எல்லோருமே இங்கிலாந்தில் விளையாடியிருக்க மாட்டார்கள். எனவே இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் எங்களின் சீனியர் வீரர்களிடமிருந்தது பெற்றுக்கொண்டது என்னவெனில், நாங்கள் எங்கும் சென்று விளையாட முடியும் என்ற நம்பிக்கைதான். அதே நம்பிக்கையுடன் நாங்கள் முயற்சிப்போம்.
கோலியின் ஓய்வுக்குப் பிறகு நானும் கம்பீரும் விவாதித்தோம். நம்பர் 4-ல் நான்தான் விளையாட வேண்டும் என அவர் விரும்பினார். நானும் அதில் தெளிவாக இருந்தேன்.

அணியில் வீரர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் ஜெயித்துவிட்டால், இந்தத் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், வீரர்களுக்குத் தெளிவான தகவலை வழங்குவதும், அவர்களுடன் நேர்மையான உரையாடல்களை நடத்துவதும்தான் முக்கியம்.
அதுதான், கேப்டனுக்கு வீரர்களுக்கும் இடையில் நல்ல பிணைப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஐ.பி.எல் சமயத்தில் கோலி, ரோஹித் இருவரையும் சந்தித்தேன். அவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
குறிப்பாக, இங்கிலாந்தில் எதிர்கொள்ளக்கூடிய சில சவால்களைப் பற்றி என்னிடம் சொன்னார்கள்.
2023-24-ல் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் விளையாடிய டெஸ்ட் தொடர்தான், நான் விளையாடியதிலேயே சிறந்த தொடர்.
அந்தத் தொடரில் என்ன செய்தோமோ அதுதான் இங்கும் இருக்கும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.