கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
ENG vs IND: "இப்படியும் நடக்குமா?" - பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து கபில் தேவ்
இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கும், அனுபவ கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் இன்று டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் முக்கிய அம்சமாக, 2007 முதல் இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் தொடரை `பட்டோடி டிராபி' என்று அழைக்கப்பட்டு வந்ததை, இந்தத் தொடர் முதல் `ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி' என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இணைந்து மாற்றியிருக்கிறது.

முன்னதாக, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் விளையாடி இந்திய அணியை வழிநடத்திய இஃப்திகார் அலிகான் பட்டோடியின் நினைவாகவும், பின்னாளில் அவரைப்போலவே இந்திய அணியை வழிநடத்திய அவரின் மகன் மன்சூர் அலிகான் பட்டோடியின் நினைவாகவும், இங்கிலாந்தில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி டிராபி என 2007 முதல் நடத்தப்பட்டு வந்தது.

அதேபோல், இந்தியாவில் இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் தொடர் 'அந்தோணி டி மெல்லோ டிராபி' என அழைக்கப்பட்டு வந்தது.
இத்தகைய சூழலில்தான், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் பட்டோடி டிராபி-யை ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி என மாற்றியிருக்கிறார்கள்.
இது குறித்த தகவல்கள் வெளியானபோதே, இப்பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன.
ஆனாலும், ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கோப்பை நேற்று (ஜூன் 19) அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறிருக்க, பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசியிருக்கும் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "இது கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது. இப்படியும் நடக்குமா? இருப்பினும் பரவாயில்லை, கிரிக்கெட்டில் எல்லாம் நடக்கிறது.

ஆனால், இறுதியில் எந்த வித்தியாசமும் இல்லை, கிரிக்கெட் கிரிக்கெட்தான் இருக்கும். களத்தில் கிரிக்கெட் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்." என்று கூறினார்.
மேலும், முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் சுப்மன் கில்லுக்கு, "எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சென்று விளையாடு, உன்னை வெளிப்படுத்து. அதுதான் முக்கியம்" என கபில்தேவ் அறிவுரை வழங்கினார்.