Eye Health: கூலர்ஸ்... ஸ்டைலுக்கா? கண்களைப் பாதுகாக்கவா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்
''சில நாட்களுக்கு முன்பு, 'கண் நல்லாதான் இருக்கு... சும்மா ஒரு டெஸ்ட் செஞ்சுக்கலாமேனு வந்தேன்’ என்று ஒருவர் வந்தார். அவரைப் பரிசோதித்ததில், அதிர்ச்சி. அவரின் கண் நரம்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. காரணம், அவர் அணிந்திருந்த மட்டமான கூலிங்கிளாஸ். கண் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண் நன்றாகத் தெரிவதுபோலத் தோன்றும். ஆனால், ஒரே நேர் கோட்டில்தான் அவர்களால் பார்க்க முடியும். சுற்றிலும் உள்ளவை மங்கலாகிவிடும்.
பிரச்னை பெரிதாகும்போதுதான், அதற்கான அறிகுறிகள் தெரியவரும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. வராமல் தடுக்கத்தான் முடியும். பலர், ஸ்டைலுக்கு ஒன்று, பைக் ஓட்ட ஒன்று, செல்ஃபிக்கு ஒன்று எனத் தரமற்ற கண்ணாடிகளை வாங்கிக் குவிக்கின்றனர். ஸ்டைலுக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்தை, கொஞ்சம் ஆரோக்கியத்துக்கும் கொடுக்க வேண்டும்'' என்கிற மருத்துவர் நவீன் நரேந்திரநாத், தரமான கூலிங் கிளாஸை எப்படித் தேர்ந்தெடுப்பது, தரமற்ற கூலர்ஸ் என்னென்ன பிரச்னைகளைக் கண்களில் ஏற்படுத்தும் என்பதையும் இங்கே விவரிக்கிறார்.

கூலிங் கிளாஸ் அடர் நிறத்திலிருந்தாலே அது நல்லது என்ற எண்ணம் உள்ளது. இது தவறானது. தரமான கண்ணாடிகளில், புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும், தடுப்பு இருக்கும். சாலையோரங்களில் விற்கப்படும் கண்ணாடிகளில் அது இருக்கும் என்று சொல்ல முடியாது. அதிகமான வெளிச்சத்தின்போது கண்ணின் மணி சுருங்கி, ஒளியைக் குறைவாக அனுப்பும். ஆனால், கூலிங் கிளாஸ் அணியும்போது கண்ணில் உள்ள கண்ணின் மணி நன்கு விரிந்து ஒளியை உள்ளே அனுப்பும்.
புறஊதாக் கதிர்வீச்சுத் தடுப்பு இல்லாத கண்ணாடியை அணியும்போது, அதிக அளவில் புறஊதாக் கதிர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் கண் நரம்புகள் பாதித்து, பார்வை முழுவதுமாகப் பறிபோய்விடும். நரம்பு பாதிப்பினால் பார்வை போனால், பிறகு அதைச் சரிசெய்யவே முடியாது. எனவே கூலிங் கிளாஸ் 99 அல்லது 100 சதவிகிதம் யு.வி. கதிர்வீச்சைத் தடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
கூலிங் கிளாஸாக இருந்தாலும், அதில் 'பவர்’ இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கண் சரியாகத் தெரியாததால் போடுகிற கண்ணாடியில் அவரவர் கருவிழிக்கு ஏற்றாற் போல் லென்ஸ் கொடுத்திருப்போம். அந்த லென்ஸ் வழியாக மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதனைப் பிரத்யேகமாகச் செய்வோம். ஆனால், தரமற்ற கூலிங் கிளாஸில், பவர் இருந்து, அதன் வழியாகப் பார்த்தால் தலைவலி ஏற்பட்டு, பார்வை மங்கலாகும்.
சாலையோரக் கடைகளில் கிடைக்கும் கண்ணாடிகளில் கூலிங்குக்காக சில கோட்டிங் பயன்படுத்துவார்கள். பிறகு, கையில் கிடைக்கும் துணியால் கண்ணாடியைத் துடைக்கும்போது, அந்த கோட்டிங் போய்விடும். மேலும், கண்ணாடியில் கீறல் விழும். சிலர், சின்ன ஃப்ரேம் இருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். சின்ன ஃப்ரேம் மூலமாக மேலும், கீழும் பார்க்க நேரிடுகையில், அந்த மாறுதலை அவர்களது கண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஒளி வேறுபாடும் கண் நரம்புகளைப் பாதிக்கும்.

தரமற்ற கூலர்ஸில் கிளாஸ்களின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். விபத்து நடந்தால் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துகள்கள் கண்ணுக்குள் போய்விடும். அதன் பிறகு, கண் பார்வை தெரிவதற்கு இரண்டு சதவிகிதம்தான் வாய்ப்பு இருக்கிறது.
கண்களுக்கு ஏற்ற தரமான கூலிங்கிளாஸைப் பயன்படுத்துவது மட்டுமே பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழி'' என்கிறார் மருத்துவர் நவீன் நரேந்திரநாத்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play