தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்
Ilaiyaraaja: `` `யாழ் செய்தது நீங்கள் தானே, என்னருகில் நில்லுங்கள்' என்றார் இளையராஜா!"- தருண் சேகர்
லண்டனில் வருகிற 8-ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்தவிருக்கிறார். இதற்காக இசைஞானி இளையராஜாவை பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அவருடன் தயாரிப்பாளர் அருண் விஷ்வா மற்றும் யாழிசை கலைஞர் தருண் சேகர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா இளையராஜாவிற்கு யாழ் இசைக்கருவியை பரிசாக கொடுத்தார். இந்த யாழ் இசை கருவியை செய்தது யாழிசைக் கலைஞர் தருண் சேகர்தான். இந்த இசைக் கருவியைப் பெற்றப் பிறகு இளையராஜாவே இவரை நேற்று அருகில் வரவழைத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இந்த சந்திப்புக் குறித்து தருண் சேகரை தொடர்பு கொண்டு பேசினோம், “இசைஞானி இளையராஜாவிற்கு யாழ் இசை கருவி பரிசாக கொடுத்தது `மாவீரன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வாதான். அவர்தான் என்னை நேற்று காலை தொடர்பு கொண்டு இளையராஜாவை சந்தித்து யாழை பரிசாக கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் மூலமாகதான் இந்த சந்திப்பு நடந்தது. அவர்தான் என்னை இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக அழைத்துச் சென்றார். நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். 12 வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் இசை கச்சேரி பார்த்து முடித்துவிட்டு இரவு முழுவதும் நான் நடந்தே வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அந்தளவிற்கு எனக்கு இளையராஜாவை பிடிக்கும். என்னுடைய குழுவில் இருப்பவர்கள்கூட இளையராஜாவின் சினிமா பாடல்களை தொடர்ந்து கேட்கக்கூடிய ஆட்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களும் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட எங்களுக்கும் `சிம்பொனி' இசை நிகழ்ச்சியை காண வாய்ப்பு கிடைத்து உள்ளது.

நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே இளையராஜாவை ஒருமுறை சந்தித்தேன். ஆனால் அப்போது அவரிடம் அதிகம் பேச முடியவில்லை. இப்போது என்னை பார்த்துவிட்டு `ஏற்கனவே நீங்கள் வந்து இருந்தீர்களே' என்று அவரே நினைவு கூர்ந்தார். பிறகு அந்த யாழ் இசைக்கருவியை வாசித்துப் பார்த்தார். ஒவ்வொரு யாழ் பெயராக சொல்லி அது எத்தனை நரம்புகளைக் கொண்டது என்று என்னிடம் கேட்டார்.
அவருக்கு பரிசாக கொடுத்த யாழின் வகை குறித்தும் எங்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். அவருக்கு செங்கோட்டியாழ் என்கிற யாழ் வகையை பரிசாக கொடுக்க நாங்கள் தயார் செய்தோம். இப்படி தான் எங்களுடைய உரையாடல் நிகழ்ந்தது. நாங்கள் புகைப்படம் எடுக்கும்போது `யாழ் செய்தது நீங்கள் தானே, புகைப்படத்தில் அருகில் நில்லுங்கள்!' என்று அவர் அருகில் என்னை நிற்க வைத்தார். எங்களுடைய நிறுவனத்திலும் இப்போது புது புது விஷயங்களை தொடங்கவுள்ளோம்.

இது போன்ற சமயத்தில் இசைஞானி இளையராஜாவிடம் வாழ்த்து பெற்றது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. எங்கள் நிறுவனம் தயாரித்த ஒரு யாழ் இசைஞானி இளையராஜாவிடம் இருப்பது என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்றவர், “சிவகார்த்திகேயன் சார் வருகிறார் என்று அங்கு சென்ற பிறகுதான் எனக்கு தெரியும். அவரும் இந்த யாழ் இசைக்கருவியை பார்த்து நீங்கள் செய்ததா என்று கேட்டு என்னைப் பாராட்டினார். இசைஞானி இளையராஜாவையும் நடிகர் சிவகார்த்திகேயனையும் ஒன்றாக சந்தித்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாதது” என்று கூறி முடித்துக் கொண்டார்.