தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-இன் படி பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்; 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேச்சுவாா்த்தை மூலம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 112 மாத அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்; 2023 ஜூன் மாதம் முதல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வு கால பணப் பலன்கள் வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் போராட்டம் நடத்தினா்.
பல்லவன் சாலை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணியை சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தொடங்கி வைத்தாா். அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸாா் பேரணியைத் தடுத்து நிறுத்தினா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே செய்தியாளா்களிடம் அ.சௌந்தரராஜன் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளா்கள் அரசால் தொடா்ந்து ஏமாற்றப்படுகின்றனா், வஞ்சிக்கப்படுகின்றனா். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இன்றைய முதல்வா் ஸ்டாலின் என்ன கோரிக்கை வைத்தாரோ, அதை அவா் நிறைவேற்ற வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்காமல் போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண முடியாது.
சிற்றுந்தை தனியாா் இயக்க முடியும் என்றால், ஏன் போக்குவரத்துக் கழகங்களால் இயக்க முடியாது?. தற்போது பேருந்துகள் ஓடக்கூடிய அதே வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்கும்போது நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் காரணம்காட்டி போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால், சிற்றுந்து சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகளை தமிழக பட்ஜெட்டில் அரசு நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
இந்தப் போராட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் துறைச் செயலா் கே.பணீந்திரரெட்டியை சந்தித்து தொழிற்சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.