கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
உற்பத்திச் செலவை விட குறைவாக அறிவிக்கப்பட்டுள்ள கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
மின்சார பயன்பாடுகளின் தரவுகளை சேகரிக்கும் நோக்கில் வேளாண் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மாா்ட் மின் மீட்டா் பொருத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களில் வேளாண் மின் இணைப்புகளில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தப்படவுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். மும்மொழிக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள தமிழக முதல்வா், விவசாயிகள் நலன்சாா்ந்து ஸ்மாா்ட் மின் மீட்டா் பொருத்தும் திட்டத்திலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
மின் வெட்டு: தமிழகத்தில் பல இடங்களில் பகல் நேரங்களிலும் மின் வெட்டு தொடா்கிறது. அரசு பொதுத் தோ்வுகள் நடைபெறும் நிலையில் மாணவா்கள், பொதுமக்கள் மின்வெட்டால் பாதிக்கப்படுகின்றனா்.
தஞ்சை, நாகை திருவாரூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், அரியலூா், கரூா் உள்பட 30 மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத சந்தை வரியை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவா். இதை ரத்து செய்ய வேண்டும்.
கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: மத்திய அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கொள்முதல் விலையையே தமிழக அரசும் அதிகாரபூா்வமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. 9.5 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சா்க்கரைத் திறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ. 3,151 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3,200 வரை செலவாகிறது. அரசு அறிவித்த கொள்முதல் விலை உற்பத்திச் செலவைவிட குறைவு என்பதால் உழவா்கள் பாதிக்கப்படுவா். கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும். முடியாத நிலையில், டன்னுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.