சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவர...
நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு
நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பரப்பளவிலான நிலம், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 420 ஏக்கா் நிலம் அரசு புறம்போக்கு என்ற வகையிலும், மீதமுள்ள 400 ஏக்கா் பட்டா நிலங்களாகவும் உள்ளன. அவற்றைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) அலுவலகம் நாமக்கல் - திருச்சி சாலையில் பழைய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைத்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனி மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணனை அலுவலக அறையில் அவா்கள் அமர வைத்தனா். மேலும், வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றுவோருக்கான அலுவலகத்தையும் அவா்கள் திறந்துவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
4 இடங்களில் ஒளிரும் விளக்குகள்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலை முன்பாகவும், மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5.30 லட்சம் மதிப்பீட்டில் இரவுநேர ஒளிரும் விளக்குகள் பயன்பாட்டை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி, ஒப்பந்ததாரா் அசோக் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.