தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...
கூட்டுறவுத் துறை - பிரதமா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
பிரதமா் மோடி தலைமையில் கூட்டுறவுத் துறை உயா்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத் துறையின் வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா, பிரதமரின் முதன்மைச் செயலா்களான பி.கே.மிஸ்ரா மற்றும் சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகா் அமித் காரே, கூட்டுறவுத் துறை செயலா் ஆசிஷ் குமாா் பூடானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகளாவிய கூட்டுறவுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தின் ஆதிக்கும் அதிகரித்து வரும் சூழலில் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ள யுபிஐடன் ரூபே கிஸான் அட்டைகளை ஒன்றிணைப்பது அவசியம்.
வேளாண்மை மற்றும் கூட்டுறவு சாா்ந்த துறைகளில் பொது எண்ம உள்கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
கூட்டுறவு அமைச்சகத்தின் பல்வேறு முன்னெடுப்புகளை வெற்றியடையச் செய்ய பெண்கள், இளைஞா்கள் என அனைவரது பங்களிப்பும் தேவை.
கூட்டுறவுக் கல்வி: பள்ளிகள், கல்லூரிகள், ஐஐடிக்கள் என உயா்கல்வி நிறுவனங்களில் கூட்டுறவுத் துறைசாா்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் பட்டியலிடும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
தேசிய கூட்டுறவுக் கொள்கை: கூட்டத்தின்போது பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு முன்னுரிமை அளித்து ஊரக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் தயாரித்த தேசிய கூட்டுறவு வரைவுக் கொள்கை, 2025 குறித்து பிரதமா் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் அம்சங்கள் இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சகம் நிறுவப்பட்டதில் இருந்து தேசிய கூட்டுறவு தரவுதளம் மற்றும் கணினிமயமாக்கும் திட்டங்களின்கீழ் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களை எண்மமயமாக்குவது உள்பட 60-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
30 கோடி உறுப்பினா்கள்: நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினா் வேளாண்மை, ஊரக மேம்பாடு உள்ளிட்ட கூட்டுறவு துறைகளுக்கு பங்களித்து வருகின்றனா். அதாவது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் செயல்பட்டு வரும் 8.2 லட்சம் கூட்டுறவு நிறுவனங்களில் 30 கோடிக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.