Kaali Venkat: "நான் அழுதிடவே கூடாதுன்னு நினைச்சேன்" - பட விழாவில் கலங்கிய காளி வெங்கட்
காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில் கடந்த ஜூன் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'.
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்திற்கு அடுத்தடுத்து 'Word of Mouth' மூலமாக பெரும் வரவேற்பு கிடைத்தது.
படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காளி வெங்கட் பேசுகையில், "இந்த நிகழ்வு இதுவரை படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்காக மட்டுமல்ல, இனிமேல் நீங்கள் கொடுக்கவிருக்கும் வரவேற்பிற்காகவும்தான்.
இந்தப் படத்தின் கதை என் அப்பாவின் கதை மாதிரியே இருந்தது. அவரோட வாழ்ந்துட்டோம். அவராகவே வாழ்ந்துவிடுவோம்னு இந்தப் படத்தில் நடிச்சேன்.
இந்தப் படத்தோட நிகழ்வில் நான் அழுதுவிடவே கூடாதுன்னு கவனமாக இருக்கேன். இதுவரை இருந்துட்டேன். இனியும் இருக்கணும்.
இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் பார்த்துவிட்டு ஒருவர் என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதார். என்னுடைய சட்டையே கிட்டத்தட்ட நனைந்துவிட்டது. அதே மாதிரி இன்னொருவரும் செய்தார். ஒரு கதாபாத்திரத்தில் நேர்மையாக நடிச்சேன்.
அதற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. கலையில் மட்டும்தான் அழுகையை ரசிக்க முடியும். அது நடிகர்களுக்குக் கிடைச்ச வரம்.
வேறு எந்தத் துறையிலும் அழுகையை ரசிக்கமுடியாது. இந்தப் படத்திற்காக கண்ணீர் மல்க கிடைத்த பாராட்டை நான் எப்போதும் மறக்க மாட்டேன்," என்றார்.

இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணி, "நாங்க 'தக் லைஃப்' படத்தோடு மோதினோம். காளி வெங்கட் சார் சொல்ற மாதிரி, நாங்க 'தக் லைஃப்' திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்க வந்தோம்.
இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களின் உறுதுணை இருந்தது. மக்களின் வார்த்தைகள் பரவி, பலரும் படம் பார்த்தார்கள். ஆனால், முன்னணி விமர்சகர்கள் யாரும் என்னுடைய படத்தை விமர்சனம் செய்யவில்லை." என்றார்.