`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
Kerala: நிலம்பூர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? - வேட்பாளர்கள் குழப்பம்
கேரளாவில் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் சி.பி.எம் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளரான பி.வி.அன்வர் வென்றார்.
ஆரம்பத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் இணக்கமாகச் சென்றவர் சில பிரச்னைகளால் அவரோடு முரண்பட்டார். பினராயி விஜயன் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர், இறுதியாக மம்தா பானர்ஜி-யின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அவருக்கு அக்கட்சியின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸில் இணைந்ததால் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம் என்ற நிலையில் பி.வி.அன்வர் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து நிலம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நிலம்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கலாம் என்ற மனநிலையில் இருந்தார் பி.வி.அன்வர். அதற்காக காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸை சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஆனால், கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முன்வரவில்லை. இதையடுத்து நிலம்பூர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பி வி.அன்வர் போட்டியிட்டார். சி.பி.எம் சார்பில் ஸ்வராஜ், காங்கிரஸ் சார்பில் ஆரியாடன் செளகத், பா.ஜ.க சார்பில் மோகன் ஜார்ஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நிலம்பூர் இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. 7 ஊராட்சிகள், ஒரு நகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நிலம்பூர் தொகுதியில் 2.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடந்த தேர்தலில் 72.10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2021 தேர்தலில் 75.23 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் இடைத்தேர்தலில் வாக்குகள் குறைந்தது அரசியல் கட்சிகள் மற்றும் இடைத்தேர்தலுக்கு காரணமான சுயேச்சை வேட்பாளர் ஆகியோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மழை காரணமாக வக்குப்பதிவு குறைந்திருக்கலாம் என அரசியல் கட்சியினர் ஆறுதல்படுத்திக்கொள்கின்றனர். நிலம்பூர் இடைத்தேர்தலில் பெரிய அளவில் எங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மக்கர் செய்யவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வரும் 23-ம் தேதி திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கேரளாவில் 2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.