Modi: 'நினைத்துப்பார்க்க முடியாத துயரம்' - கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்றி பேசியதென்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார்.
அதில் கோத்ரா ரயில் விபத்தை நினைத்துப்பார்க்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள்தான் 'இதுவரை நடந்ததிலேயே மிகப் பெரிய கலவரம்' என போலி பிரசாரம் செய்யப்படுவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். அத்துடன் 2002ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் 250 கலவரங்கள் ஏற்பட்டதாகவும், அடிக்கடி வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "
"....ஆனால் 2002ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 22 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு பெரிய கலவரம் கூட நடக்கவில்லை. குஜராத் அமைதியாக இருக்கிறது" என்றார் மோடி.

மேலும், பலரும் அந்த கலவரத்தை வைத்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகவும், ஆனால் இறுதியில் நீதி வென்று நீதிமன்றங்கள் அவரது பெயரை வழக்கிலிருந்து நீக்கியதாகவும் கூறியுள்ளார்.
"அந்த நேரத்தில் எங்கள் அரசியல் எதிரிகள் ஆட்சியிலிருந்தனர் (மத்திய அரசில்). அவர்கள் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்க வேண்டுமென்று நினைத்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளைக் கடந்தும், நீதிமன்றங்கள் கவனமாக ஒன்றுக்கு இரண்டுமுறை நிலைமையை ஆராய்ந்து நாங்கள் முற்றிலும் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தன.
உண்மையாகவே கலவரத்துக்கு காரணமாக இருந்தவர்கள், நீதியை எதிர்கொண்டனர்" என்று பேசினார் மோடி.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வகுப்புவாத கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர். அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார் மோடி. கலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி 2012, 2022 என இரண்டு முறை தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கோத்ராவுக்கு முன்...
"குஜராத் கலவரத்தை புரிந்துகொள்வதற்கு அதற்கு முந்தை 12,15 மாதங்களின் சித்திரத்தை உங்களுக்கு வழங்குகிறேன், அப்போது உங்களால் முழுவதுமாக அந்த சூழலை உள்வாங்க முடியும்.
உதாரணமாக, டிசம்பர் 24, 1999ல் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டு காந்தஹாரில் தரையிறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான இந்திய பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களுக்கு மரணபயம் ஏற்பட்டது".

"பின்னர் 2000ம் ஆண்டு டெல்லியில் செங்கோட்டை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதனால் மக்களிடம் எழுந்த கொந்தளிப்பு தீவிரமானது. செப்டம்பர் 11, 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டன. இது உலகையே உலுக்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தாக்குதல்களுக்கு பின்னிருந்த நபர்கள் ஒரே மனப்பாங்கை கொண்டிருந்தனர். பின்னர் அக்டோபர் 2001ல் தீவிரவாதிகள் ஜம்மு, காஷ்மீர் சட்டமன்றத்தை தாக்கினர். கொஞ்ச நாளில் 13, டிசம்பர் 2001, இந்திய நாடாளுமன்றம் குறிவைக்கப்பட்டது".
10 மாதங்களுக்குள் உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. வன்முறையால் அப்பாவி மக்கள் இறந்தனர். அந்த தீவிர சூழலில், சின்ன பொறி கூட மிகப் பெரிய அளவில் பற்றிவிடக் கூடும்.
முதலமைச்சராக Modi!
"திடீரென அக்டோபர் 7, 2001ல் நான் குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றேன். அப்போது பேரழிவு ஏற்படுத்திய நில நடுக்கத்தில் இருந்து குஜராத் மீண்டுகொண்டிருந்தது. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் அது, ஆயிரக்கணக்கானோர் மரண மடைந்தனர்.
முதலமைச்சராக நிலநடுக்கத்தில் இருந்து மீண்டவர்களின் மறுவாழ்வை உறுதிசெய்வதுதான் எனது முதல் கடமையாக இருந்தது. அதுமிகவும் முக்கியமான பணி, எனக்கு அதற்கு முன்பு அரசாங்கத்தில் அனுபவம் கிடையாது. அரசு நிர்வாகத்தின் சிறிய பகுதியாக கூட இருந்தது இல்லை, அரசுக்காக சேவை செய்ததும் இல்லை. மக்கள் பிரதிநிதியாக இருந்ததோ, தேர்தலில் பங்கேற்றதோ இல்லை".
"2002 பிப்ரவரி 24ல்தான் முதலமைச்சரானேன். திடீரென சில நாட்களிலேயே கோத்ரா சம்பவம் நடைபெற்றது. அது நினைத்துப்பார்க்க முடியாத துயரமாக இருந்தது. மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். நீங்கள் நான் முன்னதாக சொன்ன நிகழ்வுகளுடன் (விமான கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல், 9/11) இணைத்துப்பார்க்கலாம்.
இந்த தீவிரமான சூழலில் நிலைமை எவ்வளவு பதற்றமாகவும், நிலையற்றதாகவும் இருந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். இதனால் நாங்கள் எல்லோரும் சோகத்தில் மூழ்கினோம். எல்லோரும் அமைதியைதான் விரும்பினோம்." என்று கூறியுள்ளார் மோடி.
குஜராத் அன்றும் இன்றும்!
"2002ம் ஆண்டு நடைபெற்றதுதான் மிகப் பெரிய கலவரம் எனக் கூறப்படுவது தவறான தகவல். நீங்கள் அதற்கு முந்தைய தரவுகளைப் பார்த்தால் குஜராத்தில் அடிக்கடி கலவரங்கள் நடக்கும், எப்போதும் எங்காவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். மோட்டார் பைக் மோதல்கள் முதல் பட்டம் பறக்கவிடும் போட்டிவரை எல்லாவற்லும் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும்.
2002க்கு முன்பு குஜராத்தில் கிட்டதட்ட 250 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 1969ல் ஏற்பட்ட கலவரம் 6 மாதங்கள் நடைபெற்றது. நான் வருவதற்கு முன்னர் மிகப் பெரிய வரலாறு உள்ளது.
ஆனால் 2002ம் ஆண்டு நடைபெற்ற சோகமான சம்பவம், சிலர் வன்முறையை கையில் எடுக்க தொடக்க புள்ளியாக அமைந்தது... குஜராத் இப்போது அமைதியாக இருக்கிறது. அரசியலைத் தவிர்ப்பதே எங்கள் அணுகுமுறையாக எப்போதும் இருந்து வருகிறது.... குஜராத்தை நன்கு வளர்ந்த மாநிலமாக மாற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இன்று இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற குஜராத் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்துகிறது" என்று பேசினார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks