Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?
பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .
யார் இந்த நிதி திவாரி? -
பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி.
வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த போதே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் 96-வது இடத்தைப் பிடித்தார்.

இந்திய வெளியுறவுத் துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த நிதி திவாரி, அவரது பணித் திறமையால் 2022-ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் அலுவலக துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2023-இல் துணைச் செயலாளராக (Deputy Secretary) பதவி உயர்வு பெற்று வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய இலாகாக்களைக் கையாண்டார்.
பிரதமர் அலுவலக பதவிக் காலம் முடிவதற்கு முன்பே , அவர் வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியமர்த்தப்பட்டார். அங்கு ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலின் கீழ் 'வெளியுறவு மற்றும் பாதுகாப்பு' பிரிவில் பணியாற்றியுள்ளார் . அப்போது அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுவதோடு, வெளியுறவு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய கொள்கை துறைகளிலும் நிதி திவாரி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமையின்போது அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு பேர் தனி செயலர்களாக உள்ள நிலையில், இளம் IFS அதிகாரியான இவரும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தனி செயலராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவாரி பிரதமர் மோடியின் தினசரி நிர்வாக பணிகளை கையாள உள்ளார். பிரதமர் மோடியின் மீட்டிங்குகள், அதற்கான தயார் நிலைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை தொடர்பான பணிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார்.
உதவி ஆணையர் , IFS அதிகாரி, பிரதமர் அலுவலத்தில் துணை செயலர் என்று படிப்படியாக உயர்ந்து பிரதமரின் தனி செயலர் நிலைக்கு உயந்திருக்கும் நிதி திவாரி நீதி தவறாமல் பணியாற்றி மேலும் உச்சம் தொட வாழ்த்துகள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
