OPS: ``ஏற்கெனவே முதல்வருடன் தொடர்பில் இருந்தால்தான்" - ஓபிஎஸ் அறிக்கைக்கு நயினார் நாகேந்திரன் பதில்
முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதே தனக்குத் தெரியாது என்றார் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மேலும் அவர் கேட்டுக்கொண்டால் பிரதமரிடம் நேரம் வாங்கித் தருவதாகக் கூறினார்.

இந்தச் சூழலில், "நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வேண்டும். நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயன்றேன். ஆனால் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.
நயினார் நாகேந்திரனிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ``ஓ.பி.எஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. அந்தக் கடிதம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை. அந்தக் கடிதம் என்னிடத்தில் வந்து விட்டால், நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். அப்போது யார் உண்மையைச் சொல்லி இருக்கிறார், யார் பொய் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவந்துவிடும்.
தமிழ்நாட்டு முதல்வரை எடுத்த உடனே நேரடியாகப் பார்த்துப் பேசி விட முடியாது. ஏற்கனவே இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால்தான் நேரில் சந்தித்து ஒரு முடிவெடுத்திருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தது.

அதனால் ஓ.பி.எஸ் பற்றிக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர் முடிவு எடுத்ததற்குக் காரணம் சொல்லுகிறார் அவ்வளவுதான். அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு முதல் நாள் நான்தான் அவரைத் தொடர்பு கொண்டேன்.
இதற்கு முன்னால் சட்டமன்றம் நடக்கும்போது பல நேரங்களில் என்னை அழைத்திருக்கிறார். என்னுடைய உதவியாளர்கள் மூலம் என்னிடம் பேசி இருக்கிறார். எனவே, இப்போது அவர் என் மீது குறை சொல்லிருக்கிறார் நான் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டேன்" என்றார்.