2027-க்குள் புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யும் வோக்ஸ்வாகன்!
Pahalgam Attack : சிறுவயது நண்பர்களின் முதல் பயணம்... இறுதிப்பயணமாக மாறிய சோகம் - நடந்தது என்ன?
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மும்பை டோம்பிவலியை சேர்ந்த சஞ்சய் லீலா, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல் நேற்று மாலை மும்பை வந்தது. அவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டோம்பிவலியில் உள்ள மைதானம் ஒன்றில் மூவரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்தது. உயிரிழந்த மூன்று பேரும் நண்பர்கள் ஆவர். அவர்கள் நீண்ட நாள் கழித்து குடும்பத்தோடு இந்த பயணத்திற்கு திட்டமிட்டு இருந்தனர்.
இது குறித்து சஞ்சய் லீலாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் இது குறித்து கூறுகையில்,'' சஞ்சய் லீலாவின் மனைவி கவிதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு 13 ஆண்டுகளாக எங்கும் செல்லவில்லை. தற்போது உடல் நிலை சரியாகி இருந்ததால் சஞ்சய் லீலா தனது நண்பர்கள் அதுல் மற்றும் ஹேமந்த்துடன் சேர்ந்துடன் குடும்பத்தோடு காஷ்மீர் செல்ல முடிவு செய்தனர்.

மூன்று பேரும் தங்களது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்'' என்றனர். மூவரும் இறந்த செய்தி கேட்டவுடன் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே இறந்தவர்களின் உறவினர்கள் காஷ்மீர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சஞ்சய் லீலாவின் 20 வயது மகன் ஹர்ஷல் தனது தந்தை காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது கூடவே சென்றார். மருத்துவமனையில் சஞ்சய் லீலாவும், அவரது நண்பர்கள் இறந்தபோது அதனை உடனே தனது தாயாரிடம் மற்றும் இறந்தவர்களின் மனைவிகளிடம் சொல்லவில்லை.
சஞ்சய் லீலாவும், அவரது நண்பர்களும் இறந்து 15 மணி நேரம் கழித்த பிறகு உறவினர்கள் வந்தபோதுதான் இறந்தவர்களின் மனைவிக்கே இது குறித்து தெரிய வந்தது. நேற்று டோம்பிவலியில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதோடு இன்று டோம்பிவலியில் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முதல் பயணம் இறுதி பயணமாக அமைந்த சோகம்
தீவிரவாதிகளின் தாக்குதலில் புனேயை சேர்ந்த கௌஸ்துப்(58) மற்றும் சந்தோஷ்(50) ஆகியோரும் பலியாகி இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் ஆவர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்ந்து குடும்பத்தோடு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இப்பயணத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் இரண்டு பேரும் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியானார்கள்.
இது குறித்து சந்தோஷ் நண்பர் ரவீந்திரா கூறுகையில்,''நாங்கள் அனைவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகத்தான் இருக்கிறோம். எவ்வளவு வேலை இருந்தாலும் கெளஸ்துப்பும், சந்தோஷும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கட்டாயம் சந்தித்து பேசிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருவரும் எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். கடுமையான வேலைகளுக்கு மத்தியில் அவர்கள் குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் இப்போது திரும்ப வரமாட்டார்கள் என்று நம்பமுடியவில்லை''என்றார்.

தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்த கெளஸ்துப் மகள் அஸ்வரி கூறுகையில்,'' துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் நாங்கள் ஒரு குடிலுக்கு பின்புறம் மறைந்து நின்றோம். ஆனால் அங்கு வந்த தீவிரவாதிகள் எனது தந்தையை முதலில் சுட்டனர். பின்னர் அருகில் நின்ற சந்தோஷ் அங்கிளை சுட்டுவிட்டு சென்றனர்'' என்றார். கெளஸ்துப்பிற்கு புனே முழுவதும் 16 வேவு, மிச்சர் விற்பனை செய்யும் பர்சான் கடைகள் இருக்கிறது. இத்தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றார்.
மும்பையில் இருந்து 17 பெண்கள் தனியாக காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அவர்கள் இத்தாக்குதல் நடந்த போதிலும் கட்டாயம் தங்களது பயணத்தை முடித்துவிட்டுத்தான் வருவோம் என்று தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்வது வழக்கமான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.