PBKS vs LSG: `எப்போதும் டாப் ஆர்டரையே நம்பிக்கொண்டிருக்க முடியாது' -தோல்விக்குப் பின் பண்ட் விரக்தி
லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 237 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய லக்னோ அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற, அந்த அணியில் 91 ரன்கள் அடித்த ப்ரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருது வென்றார். புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய லக்னோ கேப்டன், "முக்கியமான கேட்சுகளைத் தவறவிடும்போது அது உங்களை மோசமாகக் காயப்படுத்தும். சரியான லெந்த்தை நாங்கள் பிடிக்கவில்லை. இருப்பினும் இவையனைத்தும் ஆட்டத்தின் ஒரு பகுதி. பிளேஆஃப் செல்லும் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அடுத்த 3 போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றால் நிச்சயமாக அதை நாங்களே சரிசெய்ய முடியும்.

உங்கள் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது நன்றாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் நன்றாக வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவும் பார்ட் ஆஃப் தி கேம்தான். ஒவ்வொரு முறையும் அவர்களால் எங்களுக்கு கடினமான வேலையைச் செய்ய முடியாது. நீங்கள் முதலில் சொன்னது போல். எங்களின் ஆட்டத்தை நாங்கள் இன்னும் ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டும்." என்று கூறினார்.