Union Budget 2025: "தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்" - கேரள முதல்வர் காட்டம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கேரளாவின் முக்கிய தேவைகளை நிராகரித்த மத்திய அரசு வருடாந்திர பொது பட்ஜெட்டானது மிகவும் ஆட்சேபத்துக்குரியது. ஈடுசெய்யமுடியாத துயரத்தை எதிர்கொண்ட வயநாட்டின் புனரமைப்புக்காகச் சிறப்பு பேக்கேஜ் வேண்டும் எனக் கேட்டிருந்தோம். பட்ஜெட்டில் வயநாட்டுக்கு எதுவுமில்லை. கேரளா மாநிலம் 24,000 கோடி ரூபாய்க்கான தனி பேக்கேஜ் கேட்டிருந்தது. விழிஞ்சம் சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு, அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அங்கிகாரம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தோம். இவற்றை எல்லாம் பரிசீலிக்கவில்லை என்பதுமட்டும் அல்ல, பெரிய திட்டங்கள் ஒன்று கூட கேரளாவுக்கு இல்லை. எய்ம்ஸ், ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற கேரளாவின் நிரந்தர கோரிக்கைகளை இந்த பட்ஜெட்டில் புறக்கணித்து இருக்கிறார்கள். 25 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்காக ஒதுக்கீடு செய்து வைக்கும்போது 40 ஆயிரம் கோடி ரூபாய் கூட கேரள மாநிலத்திற்கு வழங்காத நிலைதான் உள்ளது.
கல்வித்துறையில் கேரளம் சாதித்த முன்னேற்றங்களை முன்னிறுத்தி கேரளாவைத் தண்டிக்கிறார்கள். முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கல்வித்துறைக்கு நிதி இல்லை என்கிறார்கள். அப்படியானால் முன்னேற்றம் ஏற்படாத துறைகளுக்கு நிதி உண்டா என்றால், அதுவும் இல்லை. கேரளம் கூறிய எந்த கோரிக்கைகளையும் அங்கீகரிக்கவில்லை. விவசாய விளை பொருள்களுக்கு அதிகபட்ச அடிப்படை ஆதார விலை இல்லை. ரப்பர், நெல், தேங்காய் விவசாயிகளுக்காக எதுவும் இல்லை. ரப்பர் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை. கேரளாவின் எதிர்பார்ப்புகளை அலட்சியப்படுத்தும் அரசியல் அடையாளமாக மாறிவிட்டது மத்திய பட்ஜெட்.
பட்ஜெட் என்பது வருமானத்தின் அடையாளமாக இருக்க வேண்டும். அதேசமயம் தேர்தல் எங்கெல்லாம் நடக்கிறது எனப் பார்த்து, பார்த்து அந்த இடங்களை மையப்படுத்திய அரசியல் அணுகுமுறையாக பட்ஜெட்டை பார்க்க முடிகிறது. சமமான வளர்ச்சி என்ற உறுதியை இது மாற்றியுள்ளது. ஓ.பி.சி, பட்டியலினத்தவர்கள், விவசாயம், விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவில்லை. விவசாயத்துறையில் பல்வேறு சப்சிடிகள் குறைக்கப்பட்டுள்ளன.
நூறுநாள் வேலை உறுதித்திட்டம் போன்றவற்றுக்குக்கூட நிதி ஒதுக்கி வைக்கவில்லை. பணவீக்கமும், வேலை இல்லாத நிலையையும், வறுமையையும் அதிகரிக்கும் பட்ஜெட் ஆகும். மாநில கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மையை மீறும் செயலாகும். மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஆட்சேபனைக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs