தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
Union Budget 2025: ``நாங்கள் சொல்லும்போது நம்பாதவர்கள் இப்போது?" - விமர்சிக்கும் பா.சிதம்பரம்
2025 - 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரமும் பட்ஜெட் தொடர்பாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
அவர், `` இது தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்தைப் போன்றது. 2025-2026 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகார் வாக்காளர்களை குறிவைத்ததாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இருந்து எடுக்க வேண்டிய செய்தி என்னவென்றால், பா.ஜ.க வரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகார் வாக்காளர்களை மயக்க முயற்சிக்கிறது. இந்த அறிவிப்புகள் 3.2 கோடி வரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகாரின் 7.65 கோடி வாக்காளர்களால் வரவேற்கப்படும். மீதமுள்ள இந்தியாவுக்கு நிதியமைச்சரிடம் ஆறுதலான வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை, இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பிரதமரின் தலைமையில் கைதட்டலும் கொடுக்கின்றனர்.
அரசு நிதிப் பற்றாக்குறையை 4.9% -லிருந்து 4.8% ஆக மேம்படுத்தியதாக கூறுகிறது, ஆனால் இது பொருளாதாரத்திற்கு பெரும் விலையை கொடுத்தே அடையப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விஷயங்களே இந்த பட்ஜெட்டிலும் இருக்கிறது. கடந்த ஆண்டைவிட திட்டங்களுக்கு இந்தாண்டு குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என மத்திய அரசு கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியிருக்கிறது. பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது , அரசின் திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் திறன் குறைந்துவிட்டது என்று நாங்கள் கூறியபோது எங்களை நம்பாதவர்கள், இப்போது எங்களை நம்புவார்கள் என்று நம்புகிறேன்.'' எனக் கூறியிருக்கிறார் பா.சிதம்பரம்.