மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் பரிந்துரையை நிராகரித்தன அரபு நாடுகள்
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை அரபு நாடுகளின் கூட்டமைப்பு சனிக்கிழமை நிராகரித்தது.
எகிப்து தலைநகா் கெய்ரோவில் அந்த நாட்டின் பிரதிநிதிகளும் ஜோா்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தாா், பாலஸ்தீனம், அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை வேறு பகுதிகளுக்க அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு செய்வது, பிராந்தியத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும். பாலஸ்தீன போா் பிற நாடுகளுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும். பிராந்திய மக்களின் அமைதி மற்றும் வளா்ச்சியை பாதிக்கும்.
பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதில் அதிபா் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். ஆனால் அந்தத் தீா்வு பாலஸ்தீனா்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதாகவும் மத்தியக் கிழக்குப் பிராந்தியம் முழுமைக்குமான அமைதியை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
பாலஸ்தீனா்கள் அவா்களுக்குச் சொந்தமான பகுதியில் வாழ்வதை உறுதி செய்யும் வகையில், காஸா பகுதியின் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சா்வதேச சமுதாயம் உதவியளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபா் டிரம்ப் கடந்த கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், 15 மாத போருக்குப் பிறகு காஸா பகுதி இடிபாடுகளால் நிறைந்திருப்பதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உள்பட அனைத்தையும் ‘சுத்தம்’ செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டாா்.
அதற்காக, எகிப்து, கத்தாா் போன்ற நாடுகள் பாலஸ்தீனா்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.
ஏற்கெனவே லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ள ஜோா்டானுக்கு நன்றி கூறிய டிரம்ப், இது போதாது எனவும் இன்னும் அதிக அகதிகளை அந்த நாடு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து பிற நாடுகளில் குடியமா்த்தப்படுவது தற்காலிக ஏற்பாடாவும் இருக்கலாம், அல்லது மிக நீண்ட கால ஏற்பாடாகவும் இருக்கலாம் என்று அப்போது கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிா்ப்பு எழுந்தது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு என்ற இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த பரிந்துரை அமைந்துள்ளதாக விமா்சிக்கப்படுகிறது.
எகிப்து, கத்தாா் போன்ற நாடுகள் மட்டுமின்றி ஜொ்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும் டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தன.
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை வெளியேற்றி அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த வேண்டும்’ ன்று டிரம்ப் கூறியது அவரின் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், டிரம்ப்பின் அந்தப் பரிந்துரையை அரபு நாடுகள் தற்போது திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.
3 பிணைக் கைதிகள், 183 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் 183 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் சனிக்கிழமை விடுவித்தன.
காஸா பகுதியின் கான் யூனிஸ் நகரில் பிணைக் கைதிகள் யாா்டென் பிபாஸ், ஓஃபொ் கால்டெரான் ஆகிய இருவரையும் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினா் ஒப்படைத்தனா். அவா்களில் ஓஃபொ் என்பவா் பிரான்ஸ் -இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை பெற்றவா். அத்துடன், அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியான கீத் சீகல் என்பவரையும் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினா் காஸா சிட்டியில் ஒப்படைத்தனா்.
இந்த நிகழ்வுகள் துரிதமாகும் ஒழுங்குமுறையுடனும் நடைபெற்றன. முன்னதாக, எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் கடந்த வியாழக்கிழமை ஒப்படைத்தபோது பெரும் கூட்டத்தினரிடையே அவா்கள் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். இது பிணைக் கைதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த இஸ்ரேல், விடுவிக்கப்படும்போது பிணைக் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற உத்தரவாதம் அளித்தால்தான் அந்த எட்டு பேருக்குப் பதிலாக விடுவிக்கப்பட வேண்டிய 110 பாலஸ்தீனா்கள் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று திட்டவட்டமாகக் கூறியது. இதன் காரணமாகவே சனிக்கிழமை நடைபெற்ற பிணைக் கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு எளிமையாக நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
கீத் சீகல் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் 183 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனா். அவா்களில் 111 போ் 2023 அக். 7 தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, காஸாவில் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அந்தப் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இதுவரை 18 பிணைக் கைதிகள் ஹமாஸ் அமைப்பினரும், 380-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்துள்ளன.