பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சர...
World Tiger Day: புலியின் உறுமலே காட்டின் மொழி... புலியே மெய்யான வனக்காவலன்! - ஏன் தெரியுமா?
இன்று (ஜூலை 29-ம் தேதி) சர்வதேச புலிகள் தினம். புலிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, சீன, ரஷ்யா உட்பட்ட 13 நாடுகளில்தான் புலிகள் வாழ்கின்றன. இதில், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இந்தியாவில்தான் உள்ளன.
சர்வதேச புலிகள் தினம் 2010 ரஷ்யாவில் உள்ள 'செயின்ட் பீட்டர்ஸ்ஸ்பர்க்'கில் நடந்த புலிகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், அடுத்த பத்து வருடங்களுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக புலிகள் வாழும் நாடுகள் உறுதியளித்தன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகளின் எண்ணிக்கையை வெளியிடுகிற இந்திய வன உயிரியல் நிறுவனம் 2010-ல் இந்தியாவில் 1,706 புலிகளும், 2014-ல் 2,226 புலிகளும், 2018-ல் 2,967 புலிகளும், 2022-ல் 3,682 புலிகளும் இருந்ததாக தெரிவித்தது. இது, உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் ஆகும்.

புலிகளின் இயல்புப்பற்றி சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடர்பான ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளரும் சுற்றுச்சூழல் பரப்புரையாளருமான கோவை சதாசிவத்திடம் பேசினோம்.
புலி காட்டின் தலைமகன். புலிதான் வனத்தின் உண்மையான காவலன். புலியின் உறுமல்தான் காட்டின் மொழி. புலி வாழ்கிற காடுகள் வளமாக இருக்கும். அங்கு மான்கள் போன்ற தாவர உண்ணிகள் இருக்கும். அவை வாழ புல்வெளிகள் இருக்கும். புல்வெளிகள் இருந்தால், பெய்யும் மழைநீரை சேகரித்து வைக்கும் ஓடைகளும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல், புலி வாழ்கிற காடுகளுக்குள் மனிதர்கள் செல்ல மாட்டார்கள். மனிதர்கள் செல்லாத காடுகள் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
ஆக, ஒரு புலியின் இறப்பு என்பது, அது வாழ்ந்த சில சதுர கி.மீட்டர் நிலப்பரப்புக்கான இழப்பு என்று அர்த்தம். புலிகள்தான் உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை. புலி இல்லையென்றால், தாவர உண்ணிகள் பெருகி, அதனால் தாவரங்கள் அழிந்து, கூடவே ஓடைகள் மறைந்து, நமக்கு வர வேண்டிய நீர்வரத்துக் குறையும். அதனால்தான், எங்கோ மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்துவிட்டால், டெல்டா பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு தண்ணீர் வராது என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.
இந்தியாவை மன்னர்கள் ஆண்ட காலத்திலும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலும் புலி வேட்டை என்பது வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. இதன் விளைவாக, புலிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்க, 1972-ல் வன உயிர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 1973-ல் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 'புலிகள் பாதுகாப்பு திட்டம்' நடைமுறைக்கு வந்தது.
தற்போது புலிகள் வாழ்கிற காடுகளுக்கு மிக அருகாமையில் மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டு விட்டார்கள். கூடவே, புலிகள் தாங்கள் வசிக்கிற பகுதிக்கு வராமல் இருக்க, மின்வேலி வைப்பது, அதன் உணவில் விஷத்தை வைப்பதெல்லாம் அறிவான செயலும் அல்ல, ஆரோக்கியமான செயலும் அல்ல... மனிதன் காடுகளின் பரப்பளவை சுருக்கிக்கொண்டே செல்கிறான். விளைவு, புலிகள் மனிதர்களுக்கு மிக அருகில் வந்து தங்களுடைய உயிரை இழந்து விடுகிறது அல்லது எதிர்ப்படும் மனித உயிர்களைப் பறித்து விடுகிறது.
புலிகளின் இனப்பெருக்க காலத்தில் தனக்கான இணையைத் தேடி பயணிக்கும். அதுபோகிற வழியில் மின்சார வேலியோ, சுருக்கு வலையோ, விஷ மாமிசமோ இருந்தால், காட்டின் காவலாளிகளான புலிகளின் உயிருக்கு எந்தக் காவலும் இல்லாமல் போய்விடும்.

புலி என்பது காட்டில் தனித்து வாழ்கிற ஒரு விலங்கு. ஒவ்வொரு புலியும் தனக்கென்று சில சதுர கி.மீட்டர் தூரத்தை தன்னுடைய வாழ்விடமாக காட்டில் வைத்திருக்கும். தன்னுடைய வாழ்விடத்தில் பெருகிற தாவர உண்ணிகளின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்து, காட்டின் சமநிலை சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளும். தன்னுடைய வாழ்விட எல்லையை புலிகள் எப்படி நிர்ணயிக்கும் என்பது தெரிந்தால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
சிறுநீர் கழித்தும், மரங்களில் நகங்களால் கீறியும் தனக்கான எல்லைகளை ஆண் புலிகள் நிர்ணயிக்கும். ஓர் ஆண் புலியின் எல்லைக்குள் இன்னோர் ஆண் புலி வராது. ஆண் புலி ஒரு பெண் புலியுடன் இணை சேர்வதற்கு முன்னால், இன்னோர் ஆண் புலி இடை நுழைந்தால் அதனுடன் சண்டையிட்டு, அதை விரட்டிவிட்டுதான் இணை சேரும். பெண் புலி குட்டிகள் ஈன்றவுடன், அதற்கு பாதுகாப்பாக ஆண் புலி இருக்கும்.
ஆண் புலிகள் தங்கள் சர்வைவலுக்காக ஒரு யுக்தியை செய்யும். அதாவது, மற்ற ஆண் புலிகளுக்குப் பிறந்த ஆண் குட்டிகளைக் கொன்று விடும். எதிர்காலத்தில் தனக்கு வாழ்விட போட்டி வராமல் இருப்பதற்காக வளர்ந்த ஆண் புலிகள் இப்படி செய்யும். ஆண் புலிகளின் இந்த யுக்தியை வெல்வதற்கு பெண் புலிகளிடமும் ஒரு யுக்தி இருக்கிறது. தான் இணை சேர்ந்திருக்கும் ஆண் புலிக்குத் தெரியாமல் ஒரே நேரத்தில், அருகாமையில் இருக்கிற இன்னும் சில ஆண் புலிகளுடன் உறவு வைத்துக்கொள்ளும். இதனால், அந்தப் பெண் புலி ஈனும் குட்டிகளை எல்லா ஆண் புலிகளுமே தங்களுடைய குட்டிகள் என்று நம்பி கொல்லாமல் விட்டு விடும்.

குட்டிகளுக்கு 4 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும் பெண் புலி. அதன் பிறகு, பதுங்குதல், பாயுதல், வேட்டையாடுதல் என அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும். குட்டிகளுக்கு ஒரு வயதான பிறகு, அது ஆண் புலி என்றால், அது தனக்கானத் துணையைத் தேடி செல்வதற்கு அனுப்பி விடும்'' என்கிறார் கோவை சதாசிவம்.
புலிகள் வாழட்டும்; வனம் வளமாகட்டும்; பல்லுயிர் பெருகட்டும்..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...