ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை முழுவதும் நீக்க அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசு மெட்டா நிறுவனம் மீது நம்பிகையற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் விசித்திரமான யோசனை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க அவர்களின் நண்பர்கள் பட்டியல் முழுவதையும் நீக்கி மீண்டும் முதலிலிருந்து புதிதாக நண்பர்களுடன் இணைவதை ஊக்குவிக்கலாம் என மார்க் ஸக்கர்பெர்க் மெட்டா ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செய்தி அனுப்பியுள்ளார்.
இதன்மூலம், ஃபேஸ்புக் தளத்தில் பயனர்களை அதிகநேரம் செலவிட வைக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ஃபேஸ்புக் தலைவர் டாம் அலிசன் உள்பட மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் பலரும் அப்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் தளத்தை நண்பர்கள் சார்ந்த மாடலாக இல்லாமல், பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) சார்ந்த மாடலாக மாற்றவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதுவும் செயல்படுத்தப்படவில்லை.
கடந்த சில வாரங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பழைய ஃபேஸ்புக் அமைப்பை மீட்டெடுக்கும் விதமாக புதிய டேப் (Tab) மூலம் நண்பர்களை இணைத்து அவர்களின் ரீல்ஸ்கள், கண்டென்டுகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது.
இதன்மூலம் தனது பழைய திட்டங்களைக் கைவிட்டு ஃபேஸ்புக்கை பழைய முறையிலேயே இயங்கவைக்க மார்க் ஸக்கர்பெர்க் முயற்சித்து வருகிறார்.
"ஃபேஸ்புக் தற்போது இருப்பதைவிட கலாச்சார ரீதியாக செல்வாக்கு மிக்கதாக மாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பேஸ்புக் முன்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதே நிலைக்கு மீண்டும் திரும்பும்" என்று மார்க் ஸக்கர்பெர்க் தனது அடுத்தகட்ட இலக்குகள் பற்றி 2024 இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.