CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்...
``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை 2025 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. ``சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸின் அடுத்த இலக்காக கிறிஸ்தவ சமூகம் இருக்கலாம்" என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான Organiser இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், ``இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் அரசு சாரா நில உரிமையாளர்களாக 7 கோடி ஹெக்டேர் நிலத்தை வைத்திருக்கின்றன." என கிறிஸ்தவர்களை குறிவைத்திருக்கிறது. சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அதுவே எதிர்காலத்தில் பிற சமுதாயங்களை குறிவைக்கும் மாதிரியாக மாறும் என்றும் நான் கூறியிருந்தேன்.
கிறித்தவர்களே அடுத்த இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நமது அரசியலமைப்பே இப்படியான தாக்குதல்களில் இருந்து மக்கள் பாதுகாக்கும் ஒரே கவசம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னித்தலா, “இது கிறித்தவ சமூகத்தின் சொத்துகளை அரசு குறிவைக்கும் முன்னோட்டம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இன்று முதல் அது சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.