INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுக...
அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தல்
பருவ நிலை மாற்றம் காரணமாக பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) பாதிப்பு அதிகரித்து வருவதால் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
பொன்னுக்கு வீங்கி பாதித்தவா்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா்த் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும். ஒரு வாரத்திலிருந்து 14 நாள்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பொன்னுக்கு வீங்கி பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை அண்மைக் காலமாக பொன்னுக்கு வீங்கி பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது. இருந்தாலும், அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேவேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிா்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.